புதிய அரசியலமைப்பின் ஆரம்ப வரைவு மார்ச் இறுதிக்குள் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவால் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
கண்டி நீதிமன்ற வளாகத்தில் நேற்றுமுன்தினம் (02) நடைபெற்ற கண்டி மாவட்ட சடடத்தரணிகளின் சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சொத்து, பிடியாணை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பான சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். குறிப்பாக சிவில் துறையில் மட்டும் சுமார் 50 வரைவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குத்தகைக்கு விடப்பட்ட சொத்தை திரும்பப் பெற முடியாது என்பதில் பெரிய பிரச்சினை இருக்கின்றது, அதுவும் திருத்தப்படும். பாராளுமன்றத்திலும் சில சட்டங்கள் திருத்தப்படும் மற்றவை அமைச்சரவையில் பரிந்துரைக்கப்படும்.
மேலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 100 சட்டங்கள் எதிர்வரும் வருடத்தில் திருத்தப்படவுள்ளன.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைகுழுவின் அறிக்கை குறித்து ஆராய ஜனாதிபதி விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டுவார்.
நாட்டில் காலம் கடந்த குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்கள் திருத்தப்பட்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, இவ்வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்.
மேலும் சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கை விரைவான விசாரணையின் மூலம் வலுப்படுத்தப்பட வேண்டும். எல்லாவற்றிலும் மக்கள் இறுதியில் நல்ல பலனைப் பெற வேண்டும்.
சட்டத்தை திருத்துதல், புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருதல், புதிய வழக்கறிஞர்களை நியமித்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
(எம்.ஏ.அமீனுல்லா)
No comments:
Post a Comment