மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கு கூட்டமைப்பினரே பொறுப்பு, கொவிட் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் நிச்சயம் நடத்தப்படும் - அமைச்சர் செஹான் சேமசிங்க - News View

About Us

About Us

Breaking

Friday, January 15, 2021

மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கு கூட்டமைப்பினரே பொறுப்பு, கொவிட் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் நிச்சயம் நடத்தப்படும் - அமைச்சர் செஹான் சேமசிங்க

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபைத் தேர்தல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு அத்தியாவசிய தேர்தலாக காணப்படுகிறது. மக்களின் அடிப்படை உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்கும். கொவிட்-19 வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என சமுர்த்தி, நுண்கடன் மற்றும் அரச தொழில் வழங்கல் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாண சபை முறைமையை அரசாங்கம் இரத்து செய்ய முயற்சிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு தவறானதாகும். மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு கூட்டமைப்பினர் பொறுப்புக்கூற வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்திலும் கூட்டமைப்பினர் பங்காளிகளாக செயற்பட்டுள்ளார்கள்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. மாகாண சபை முறைமையை முழுமையாக செயற்படுத்த முடியாது. மாகாண சபை முறைமையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில விடயங்கள் நாட்டின் அரச கட்டமைப்புக்கு பொருத்தமற்றதாக உள்ளது. முரண்பாடற்ற வகையிலான விடயங்கள் மாத்திரம் மாகாண சபை முறைமையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்படுத்தினார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தோல்வியடையும் என்பதை நன்று அறிந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது. ஏனைய மாகாணங்களை காட்டிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு மாகாண சபை முறைமை அத்தியாவசியமானதொன்றாக காணப்பட்டது. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தார்கள்.

நாம் வழங்கிய தேர்தல் உரிமையினை நல்லாட்சி அரசாங்கம் பாதுகாக்கவில்லை. உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அடைந்த தோல்வியின் அச்சத்தினால் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரதான எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு ஆதரவு வழங்கினார்கள். நல்லாட்சி அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் கூட்டமைப்பினர் துணை நின்றார்கள்.

மாகாண சபை முறைமையை அரசாங்கம் நீக்க முயற்சிப்பதாக கூட்டமைப்பினர் தற்போது குற்றஞ்சாட்டுவது தவறாகும்.

மக்களின் ஜனநாயாக உரிமைகளுக்கு புறம்பாக அரசாங்கம் செயற்படாது.  கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் மத்தியில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சவால்மிக்கது. அத்துடன் கொவிட் தாக்கதினால் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார மேம்படுத்துவதும் சவால்மிக்கது. 

ஆகவே, இச்சவால்களை மகாண சபைத் தேர்தலை நடத்துவதில் தேர்தல் முறைமை கொவிட்-19 தாக்கம் ஆகிய இரு பிரதான விடயங்கள் குறித்து தற்போது ஆராயப்படுகிறது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தி மகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment