சீனாவை மாத்திரம் நம்பிக் கொண்டு எடுக்கும் முயற்சிகள் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளும் - ஆணைக்குழு வெறுமனே கண்துடைப்பு நாடகம் என்பதை சர்வதேசம் நன்கறியும் : லக்ஸ்மன் கிரியெல்ல - News View

About Us

About Us

Breaking

Sunday, January 24, 2021

சீனாவை மாத்திரம் நம்பிக் கொண்டு எடுக்கும் முயற்சிகள் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளும் - ஆணைக்குழு வெறுமனே கண்துடைப்பு நாடகம் என்பதை சர்வதேசம் நன்கறியும் : லக்ஸ்மன் கிரியெல்ல

(ஆர்.யசி)

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயவும், உள்ளக ரீதியில் தீர்வுகளை எட்ட நல்லாட்சி அரசாங்கம் ஆரோக்கியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததெனவும், 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியமை இதன் ஆரோக்கியமான முன்னகர்வு என பிரதான எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவிக்கின்றார். 

ராஜபக்ஷ அரசாங்கம் பிரேரணையில் இருந்து வெளியேறினால் இலங்கை பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் எனவும் அது பொருளாதார தடை வரையில் இலங்கையை கொண்டு செல்லும் எனவும் அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயவும், ஜெனிவா நெருக்கடிகளை சமாளிக்கவும் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை அமைத்துள்ள நிலையில் அதன் நோக்கம் குறித்தும், இலங்கை மீதான ஜெனிவா நெருக்கடிகள் குறித்தும் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், யுத்த குற்றங்கள் இடம்பெற்றதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதில் இராணுவம் ஒட்டு மொத்தமாக இராணுவ குற்றங்களை செய்ததாக நாமும் கூறவில்லை. ஆனால் தனிப்பட்ட ரீதியில் இராணுவத்தில் ஒரு சிலர் குற்றங்களை செய்துள்ளனர். அதற்கான ஆதாரங்கள், நீதிமன்ற விசாரணைகள், சாட்சியங்கள் என பல உள்ளன. 

இவ்வாறான நிலையில் ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையை ஏற்றுக் கொள்வதாகவும், உள்ளக ரீதியில் இதற்கான விசாரணைகளை நடத்தை நீதியை நிலைநாட்டுவதாகவும் அப்போதைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சர்வதேசத்திற்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அந்த வாக்குறுதிகளின் பிரகாரமே தொடர்ச்சியாக மனித உரிமைகள் பேரவையில் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நல்லாட்சி அரசாங்கம் புதிதாக பிரேரணையை கொண்டுவந்து இலங்கை இராணுவத்தை போர் குற்றங்களில் சிக்க வைக்கவில்லை, போர் குற்றங்களில் சிக்கவிருந்த இராணுவத்தையும், அதற்கு துணை நின்ற தலைவர்களையும் எமது அரசாங்கத்தில் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக காப்பாற்றியுள்ளோம். 

2015 ஆம் ஆண்டு அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையை நாம் நிராகரிக்காது இணை அனுசரணை வழங்கியதன் மூலமாகவே இலங்கைக்கான சர்வதேச ஒத்துழைப்புகள் கிடைக்கப் பெற்றது. 

இலங்கைக்குள் தமிழர்களை திருப்திப்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடிந்தது. ஐரோப்பிய நாடுகள் பல எமக்கான உதவிகளை செய்யவும், ஒத்துழைப்புகளை வழங்கவும் தீர்மானம் எடுத்தனர். அவற்றின் மூலமாக இலங்கை சர்வதேசத்துடன் நெருக்கத்தை உருவாக்கியது.

ஆனால் ராஜபக்ஷவினரின் அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அவர்களில் பழைய தவறுகளை செய்ய தயாராகி விட்டனர். 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலகிக் கொள்வதாக கூறியுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் அதற்கான எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டனர். 

இந்த நிலைமை தொடருமாயின் இலங்கை தனித்து விடப்படுவதுடன், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளுக்கும் உள்ளாக நேரிடும். வெறுமனே சீனாவை மாத்திரம் நம்பிக் கொண்டு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் இலங்கையை மிகப்பெரிய நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. 

இப்போதும் கூட சீனாவின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே அரசாங்கம் ஜெனிவா விவகாரங்களை நிராகரிக்க தீர்மானம் எடுத்துள்ளனர். அதேபோல் அரசாங்கம் தற்போது அமைத்துள்ள ஆணைக்குழு இலங்கைக்கு எந்த விதத்திலும் கைகொடுக்கப் போவதில்லை, இது வெறுமனே கண்துடைப்பு நாடகம் என்பதை சர்வதேசம் நன்கறியும் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment