(செ.தேன்மொழி)
கொரோனா வைரஸ் தொற்றை அரசாங்கம், தங்களுக்கு கிடைக்கப் பெற்ற வசந்த காலங்களுள் ஒன்றாக எண்ணி செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாலித்த ரங்கே பண்டார குற்றஞ்சாட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் இன்று 21 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் ஒன்றாக இணைந்து செய்றபடக்கூடிய ஒரு கட்சியாகவே ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டது. அதற்கமைய கட்சியின் ஆரம்பகால தலைவர்களை போன்று, தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கட்சியின் வளர்ச்சிக்காவும், நாட்டுக்காகவும் பெருமளவு உழைத்துள்ளார்.
இந்நிலையில், தற்போது ஐக்கிய தேசிக் கட்சியின் தலைமையிலான அரசாங்கமொன்றை மக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். எமது இந்த எதிர்கால பயணத்தையும், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனே நாம் ஆரம்பித்துள்ளோம். அதற்கமைய எதிர்வரும் காலங்களில் எமது கட்சியை மேலும் உத்வேகத்துடன் மீளக் கட்டியெழுப்புவதுடன், ஆட்சியையும் கைப்பற்றுவோம்.
தற்போது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். ஆனால் அரசாங்கத்தை பொருத்தமட்டில் வைரஸ் பரவலையும் ஒரு வசந்த காலமாக எண்ணியே செயற்பட்டு வருகின்றது.
பி.சீ.ஆர் பரிசோதனை தொடக்கம், வெளிநாட்டிலுள்ள பணியாளர்களை அழைத்து வருவது வரையில், அனைத்து வழிகளிலும் பணம் ஈட்டுவதிலே அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது. அதனால் மக்களின் எண்ணங்களுக்கமைய எமது தலைமையில் புதியதொரு அரசாங்கத்தை உருவாக்குவதற்காக நாம் உறுதியுடன் உழைப்போம்.
No comments:
Post a Comment