(செ.தேன்மொழி)
நிதி முறைகேடு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஈ.ரி.ஐ நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஈ.ரி.ஐ நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் அஞ்சலி தீபா எதிரிசிங்க ஆகியோர் 6.4 மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக கடந்த வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்து செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்கள் நால்வரும், கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கினால், அவர்களுடான சாட்சியங்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மன்றில் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்தே நீதிவான் அவர்களை, நாளை செவ்வாய்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதற்கமையவே சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக முன்னாள் பணிப்பாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதற்கமைய முன்னாள் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க ஆகியோர் கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திலும், அஞ்சலி தீபா எதிரிசிங்க களுத்துறை சிறைச்சாலையில் பெண் கைதிகளுக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment