பாடசாலை மாணவர்களுக்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படாமல் பயணிக்கக்கூடிய வகையில் இந்த மாதம் 11 ஆம் திகதி முதல் 'சிசுசெரிய' பஸ் சேவை ஆரம்பிக்கப்படும் என போக்கு வரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கண்டியில் நேற்று முன்தினம் (6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் இந்த மாதம் 11 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும். இதன்போது பாடசாலை மாணவர்களை கொண்டு செல்ல தேவையான பஸ்களை வழங்க இலங்கை போக்கு வரத்து சபையின் பிராந்திய அலுவலகங்கள் தயாராக உள்ளன என்றும் அவர் கூறினார்.
பாடசாலை மாணவர்களை கொண்டு செல்வது தொடர்பாக போக்கு வரத்து அதிகாரிகளின் பிரதிநிதிகள் குழு மற்றும் பிராந்திய போக்கு வரத்து அதிகாரிகள் அடங்கிய குழு கல்வி அமைச்சருடன் மேற்கொண்டிருந்த கலந்துரையாடலையடுத்து போதுமான பஸ்களை நிறுத்த போக்கு வரத்து அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் பிராந்தியத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் சிசு செரிய பஸ்களை நிறுத்த திட்டமிட்டுள்ளோம் இவை தொடர்பில் போக்கு வரத்து பிரிவினருக்கு உரிய வலய கல்வி அதிகாரிகள் அறிவிக்க வேண்டும்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து பஸ்களும் கிருமி நீக்கம் செய்யப்படும். பஸ் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர்களுக்கு விரைவான 'ஆன்டிஜென்' பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களின் பரிசோதனை அறிக்கைகளைப் பெற்ற பின்னர் அதற்கமைய சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் நிறுத்தப்படுவதா? இல்லையா? என தீர்மானிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எம்.ஏ.அமீனுல்லா
No comments:
Post a Comment