(எம்.ஆர்.எம்.வஸீம்)
மாகாண சபை தேர்தலை நடத்தும் வரை மாகாண சபைகளை மீண்டும் செயற்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்ய தீர்மானித்திருப்பதாக கட்சியின் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நேற்று மாலை கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சி தலைமையகத்தில் கூடியது.
கூட்டம் நிறைவடைந்த பின்னர் அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் அரசியல் நிலைவரம் மற்றும் கட்சியின் நடவடிக்கைகளை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட கட்சி மத்திய செயற்குழு கூட்டப்பட்டது.
இதன்போது விசேடமாக புதிய அரசியலமைப்பு உருவாக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க கட்சியில் இருந்து குழுவொன்றை நியமிக்க கட்சி தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
அதற்கமைய புதிய அரசியலமைப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்க அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.
மேலும் மாகாண சபை தேர்தல் இடம்பெறாமல் இருந்துவருவதால் பல வருடங்களாக மாகாணங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் போயிருக்கின்றது.
அதனால் மாகாண சபை தேர்தலை நடத்தும் வரைக்கும் கலைக்கப்பட்ட மாகாண சபைகளை மீண்டும் செயற்படுத்தி, மாகாண சபை உறுப்பினர்கள் தொழிற்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணை ஒன்றை அரசாங்கத்துக்கு முன்வைக்க தீர்மானித்திருக்கின்றோம்.
அத்துடன் மாகாண சபை செயற்பட்டு மாகாண சுகாதார அமைச்சர்கள் இருந்திருந்தால் தற்போதைய கொவிட் நிலைமையை ஓரளவேனும் கட்டுப்படுத்த முடிந்திருக்கும் என்றே நாங்கள் நம்புகின்றோம்.
அதனால் தேர்தல் இடம்பெறும் வரைக்கும் மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை மீண்டும் செயற்படுத்த வேண்டும் என்பதே எமது பிரேரணையாகும். இதனை அரசாங்கத்துக்கு தெரிவிக்க இருக்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment