மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு சொந்தமான காணியை 'மாதோட்ட' விகாரையின் பிக்கு ஒருவர் அபகரிக்கும் நோக்கில் சில நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.
மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி சைவ மங்கையர் கழகத்துக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. குறித்த காணியானது, நீண்ட காலமாக திருக்கேதீச்சர ஆலயத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக, இக்காணியில் இராணுவம் நிலை கொண்டது. அதன் பின்னர் குறித்த காணி திருக்கேதீச்சர ஆலயத்திடம் மீளவும் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆலய காணியிலும், தனியார் காணியிலும் விகாரை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த தினங்களாக விகாரையின் பிக்கு மிகுதி காணியையும் அபகரிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மன்னார் திருக்கேதீச்சர ஆலய நிர்வாகம் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு கொண்டுசென்றனர்.
இதனையடுத்து, இன்று செவ்வாய்க்கிழமை (29.12.2020) காலை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர், குறித்த காணி அபகரிப்பு தொடர்பாக துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.
இதன்போது மன்னார் பொலிஸார், ஆலய நிர்வாகத்தினர், ஆலய பிரதம குரு ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment