(இராஜதுரை ஹஷான்)
கேகாலை ஆயுர்வேத வைத்தியர் தம்மிக பண்டார தயாரித்த கொவிட்-19 வைரஸ் தடுப்பு பாணத்தை பொதுமக்கள் பயன்படுத்த அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை. பாணத்தை விஞ்ஞான ஆய்வு பரிசோதனைக்குட்படுத்த மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
இணைய வழியூடாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
அவர் மேலும் குறிப்பிடுகையில், கேகாலை ஆயுர்வேத வைத்தியர் தம்மிக பண்டார தயாரித்த ஆயுர்வேத பாணம் குறித்து சமூக மட்டத்தில் பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன.
தம்மிக பண்டார தயாரித்த ஆயுர்வேத பாணம் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் ஆயுர்வேத மருந்து என குறிப்பிடப்படுகிறது. இதனை விஞ்ஞான மட்டத்தில் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த பாணத்தை மக்கள் பயன்படுத்த இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை. ஆயுர்வேத திணைக்களத்தில் இப்பாணம் முழுமையாக பரிசோதனை செய்யப்படுவதோடு, அதன் அறிக்கை பாரம்பரிய மருத்துவ கோட்பாட்டு குழுவற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆயுர்வேத மட்டத்தில் தயாரிக்கப்படும் மருந்து மற்றும் மருத்துவ சிகிச்சை முறைமைகள் அனைத்தும் மேற்குலக விஞ்ஞான மருத்துவ முறைமையின் கீழ் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
மருந்து உற்பத்தி இராஜாங்க அமைச்சு மட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உலகளாவிய மட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுக் கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment