யாழ். தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அண்மையில் குடும்பத் தலைவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இன்று (25) முற்பகல் 11 மணியளவில் அவரது வீட்டுக்கு அண்மையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் குறித்தப் பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான ஐயாத்துரை மோகனதாஸ் (வயது-47) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டிலிருந்து மீசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் புறப்பட்ட அவரை இனந்தெரியாத ஒருவர் வழிமறித்து கையிலும் நெஞ்சுப் பகுதியிலும் கத்தியால் குத்தி விட்டு தப்பித்துள்ளார்.
குருதி வெள்ளத்தில் வீதியில் கிடந்த குடும்பத் தலைவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று வைத்தியரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment