(வ.சக்திவேல்)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றினால் மரணமடைந்த இரு சடலங்களும் (ஜனாஸா) காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (29) மாற்றப்பட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமையன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 64 வயதுடையவரின் சடலமும், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 54 வயதுடைய நபரின் சடலமும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இவ்விருவரின் சடலங்களும் செவ்வாய்க்கிழமை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் இந்தச் சடலங்கள் மாற்றப்பட்டுள்ளன.
குறித்த இரு சடலங்களும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அவ் வைத்தியசாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக காத்தான்குடி பிரிவுக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் பாறூக் மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி ஆகியோர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்குச் சென்று அங்கு பாதுகாப்பு குறித்து ஆராய்ந்ததுடன் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மருத்துவர் எம்.எஸ்.எம்.ஜாபீருடன் கலந்துரையாடினர். இதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொவிட்-19 நோயாளர்களுக்கான சிகிச்சை வைத்தியசாலையாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment