நிபுணர்களின் அறிக்கையின் பிரகாரம் ஜனாதிபதி தீர்மானம் எடுக்க வேண்டும் - முஸ்லிம் ஒருவர் மரணித்தால் அது கொரோனாவாக மாறும் நிலையே நாட்டில் இடம்பெற்று வருகின்றது : அஸாத் சாலி - News View

About Us

About Us

Breaking

Sunday, December 27, 2020

நிபுணர்களின் அறிக்கையின் பிரகாரம் ஜனாதிபதி தீர்மானம் எடுக்க வேண்டும் - முஸ்லிம் ஒருவர் மரணித்தால் அது கொரோனாவாக மாறும் நிலையே நாட்டில் இடம்பெற்று வருகின்றது : அஸாத் சாலி

(எம்,ஆர்.எம்.வஸீம்)

நாட்டில் கொவிட்டில் மரணித்தவர்களில் 120 க்கும் அதிகமானவர்கள் முஸ்லிம்கள். மனிதாபிமானம் இல்லாமலே அரசாங்கம் இன்னும் செயற்பட்டு வருகின்றது. சர்வதேச மட்டத்தில் அதற்கான பெறுபேற்றை அரசாங்கம் விரைவில் கண்டுகொள்ளும். அத்துடன் வைரஸியல் நிபுணர்களின் அறிக்கையின் பிரகாரம் ஜனாதிபதி தீர்மானம் எடுக்க வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

தேசிய ஐக்கிய முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்குதொடர்ந்து தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றாளர்களை கையாழுவதிலும் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக செல்பவர்களை அனுசரிப்பதிலும் அரசாங்கமும் அரச அதிகாரிகளும் செயற்படும் விதம் மிகவும் கவலையளிக்கின்றது. மனிதாபிமானமே இல்லாத நிலைக்கு நாடு சென்றுகொண்டிருக்கின்றது. 

முஸ்லிம் ஒருவர் மரணித்தால் அது கொரோனாவாக மாறும் நிலையே நாட்டில் இடம்பெற்று வருகின்றது. அதனால்தான் நாட்டில் இதுவரை கொரோனாவில் மரணித்தவர்களில் 120 க்கும் அதிகமானவர்கள் முஸ்லிம்கள்.

மேலும் நாட்டில் வைரஸியல் நிபுணர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருக்கும் தொழிநுட்ப குழுவில் வைரஸ் தொடர்பான நிபுணர்கள் யாரும் இல்லை. இந்த குழுவின் தீர்மானத்தின் பிரகாரமே அரசாங்கம் கொவிட்டில் மரணிப்பவர்களை எரிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றது. இந்த குழுவின் தீர்மானத்தில் விஞ்ஞான ரீதியிலான எந்த தீர்மானமும் இல்லை. 

விசேடமாக குறிப்பிட்ட குழுவில் இருக்கும் அங்கத்தவர்களில் இரண்டு பேர் தற்போது வெளிப்பட்டிருக்கின்றது. வைத்தியர்களான சன்ன பெரேரா மற்றும் மெத்திகா வித்னகே ஆகிய இருவரும் வைரஸ் தொடர்பான வைத்தியர்கள் அல்ல. தற்போது இவர்களுடன் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்துகொண்டுள்ளார். வைரஸில் மரணிக்கும் சடலங்களை குளிரூட்டிகளில் வைப்பதால் அந்த வைரஸ்கள் மீண்டும் செயற்பட ஆரம்பிக்கும். அதனால் விரைவாக எரிக்க வேண்டும் அல்லது அடக்கம் செய்ய வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.

கொவிட்டில் மரணித்தவர்களில் அதிகமானவர்களின் சடலங்கள் கடந்த சில நாட்களாக குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் வைத்தியசாலைகளில் வைரஸ் பரவியதாக யாரும் தெரிவிக்கவில்லை. 

மஹர சிறைச்சாலை கலவரத்தில் மரணித்தவர்கள் அனைவருக்கும் கொராேனா என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அவர்களது சடலங்கள் இன்னும் குளிரூட்டிகளிலே வைக்கப்பட்டிருக்கின்றன. நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் குளிரூட்டிகளில் வைக்க முடியும் என்றால் ஏன் மற்ற சடலங்களை வைக்க முடியாது என கேட்கின்றோம்.

மேலும் கோவிட்டில் மரணிப்பவர்களை எரிப்பது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி நாட்டில் இருக்கும் வைரஸ் தொடர்பான நிபுணர்கள் 15 பேரை அழைத்து இது தொடர்பாக அறிக்கை ஒன்றை கேட்டிருந்தார். 

தற்போது அந்த அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் நிபுணர்களின் அறிக்கையின் பிரகாரம் ஜனாதிபதி விரைவாக தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். 

ஜனாசா எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சர்வதேச ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் நாட்டின் நற்பெயருக்கே களங்கம் ஏற்படப்போகின்றது. அத்துடன் இவ்வாறான மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் காரணமக முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவதும் குறைவடைந்து விடும் என்றார்.

No comments:

Post a Comment