மட்டக்களப்பில் சோளன் பயிர் செய்கையில் 738 கெக்டேயர் நிலப்பரப்பில் படைப்புழு தாக்கம் - மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 24, 2020

மட்டக்களப்பில் சோளன் பயிர் செய்கையில் 738 கெக்டேயர் நிலப்பரப்பில் படைப்புழு தாக்கம் - மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர்



ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 738 ஹெக்டேயர் சோளன் செய்கையில் படைப்புளுவின் தாக்கம் காணப்படுவதாகவும் அவற்றைக் கட்டுப்படுத்த மாவட்ட விவசாயப் நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் வீ. பேரின்பராஜா தெரிவித்துள்ளார்.

இது விடயமாக தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு அவர் வியாழக்கிழமை 24.12.2020 விவரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் இம்முறை பெரும்போக விவசாயத்தின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 1500 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோளன் பயிற்செய்கை மேற்கொள்வதற்கான இலக்கைக் கொண்டு விவசாய நவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த டிசெம்பெர் 15 வரையான காலப்பகுதியில் 1214 ஹெக்டேயர் சோளன் செய்கை பண்ணப்பட்டுள்ளது.

இவற்றில் சுமார் 738 ஹெக்டேயர் நிலப்பரப்பில் படைப்புளு தாக்கத்திற்கான பரவல்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.

படைப்புளுத்தாக்கம் இளம்பருவப் பயிர்களில் அதிகமாகக் காணப்படுவதுடன், முதிர் பருவ பயிர்களில் ஏற்பட்டுள்ள தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றில் 40 தொடக்கம் 61 வீதமான தாக்கங்கள் இலைகளிலும், பூக்களிலும் அவதானிக்கப்பட்டுள்ளன.

இவற்றைக் கட்டுபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த பீடைமுகாமைத்துவத் திட்டம், இயற்கை முறை மற்றும் இரசாயன கிருமி நாசினி விசிறல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் விவசாய விரிவாக்கல் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

மேலும் விவசாயத் திணைக்களத்தினால் இந்நோயினைக் கட்டுப்படுத்துவதற்காக வைரஸ் ஒன்று அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளது.

இது பௌலிஜன் எனும் திரவ மருந்தாகும். இதனை நோய்த்தாக்கமுள்ள பயிர்களில் புளுக்களில் படும்படியாக விசிறப்படும்போது நோயினை முற்றாகக் கட்டுப்படுத்த முடியும்.

இதுதவிர இந்நோய்த்தாக்கத்தினை ஆய்வு செய்து முற்றாகக் கட்டுப்படுத்த கிழக்குப் பல்கலைக்கழக பூச்சியியலாளர் கலாநிதி நிரஞ்சனா, கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய பூச்சியியலாளர் கலாநிதி அரசசேகரி, பத்தளகொட நெல் ஆராச்சி நிலைய பூச்சியியலாளர் கலாநிதி சொர்ணா ஆகியோர் தலைமையில் மூன்று விசேட குழுக்கள் தாளயடிவட்டை, புல்லுமலை, கரடியனாறு ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதிப்பணிப்பாளர், உதவி விவசாய பணிப்பாளர்கள், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், தொழினுட்ப உத்தியோகத்தர்களுக்கு இந்நோயத்தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் விதம் தொடர்பாகவும், விவசாயிகளுக்கு விழிப்பூட்டல் செய்து, கட்டுப்பாட்டு செயன்முறைகளைக் கற்றுக் கொடுக்கும் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment