திருகோணமலை - மூதூர் பகுதியில் 3 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு 20 வருட கால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், குற்றவாளிக்கு கடூழிய சிறைத் தண்டனை விதித்து நேற்று (02) தீர்ப்பளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளில் இருவரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளிற்கே நேற்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
20 வருட கால கடூழிய சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக 10 இலட்சம் ரூபா நட்டஈடு விதிக்கப்பட்டுள்ளது.
நட்டஈட்டை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 4 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
குற்றவாளிக்கு 20,000 ரூபா தண்டப் பணத்தை விதித்துள்ள நீதிபதி, அதனை செலுத்த தவறும் பட்சத்தில் ஓராண்டு கடூழிய சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை - மூதூர் பகுதியில் 2017 ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் 35 வயதை விட குறைந்த திருமணமான ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பிரதிவாதியிடம் மேற்கொள்ளப்பட்ட உயிரணு பரிசோதனை மற்றும் சாட்சியங்களூடாக அனைத்து குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி கலிமா பைஸ் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
No comments:
Post a Comment