போலி ஆயிரம் ரூபா நோட்டுக்களை அச்சிட்டு அவற்றை கடைகளில் மாற்றிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்காவும் தம்பியும் அவர்களது சகாவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியுடன் (23) மள்வானை, யபரலுவ ல்கோல ஹந்திய (பாடசாலை சந்தி) பிரதேசத்தில் வைத்து பியகம பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இம்மூவர் வசமிருந்த 21 போலி ஆயிரம் ரூபா நோட்டுக்களுடன் போலி நாணயத்தாள்களை கடைகளில் மாற்றி பெறப்பட்ட நாப்பத்தி ஆறாயிரம் ரூபாவும் (46,000/=) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இப்போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்காக உபயோகிக்கப்பட்ட அதி நவீன வர்ண அச்சு இயந்திர மொன்றையும் ஹோமாகம பிடிபன பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
முச்சக்கர வண்டியொன்றில் பயணித்து சந்தேகத்துக்கிடமான முறையில் மூவர் கடைகளுக்குச் சென்று பொருட்கள் கொள்வனவு செய்து போலி நாணயத்தாள்களை மாற்றி வருவதாக பியகம பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.ஜே.எம் ஆர் சமரசிங்கவுக்கு கிடைத்த தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்காவும் (48) தம்பியும் (42) சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு சகா( 27) கடுவலைப் பிரதேசத்தைச் சேர்ந்தவராவர்.
மள்வானை விசேட நிருபர்
No comments:
Post a Comment