யாழ். மருத்துவ பீட மாணவன் மரணத்தில் சந்தேகம் - இரத்த மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 18, 2020

யாழ். மருத்துவ பீட மாணவன் மரணத்தில் சந்தேகம் - இரத்த மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் அவர் வசித்த வீட்டிலிருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

யாழ். வடமராட்சி மாதா கோவில் வீதி, துன்னாலை வடக்கு கரவெட்டியைச் சேர்ந்த 23 வயதான சிதம்பரநாதன் இளங்குன்றன் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

குறித்த மாணவன் கோண்டாவில் கிழக்கு, வன்னியர்சிங்கம் வீதியிலுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த மாணவன் தற்கொலை செய்துகொள்ளக் கூடிய சம்பவங்கள் எதுவும் நடந்திருக்கவில்லை எனவும், மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை சடலத்தைப் பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி மயூரன், கழுத்து இறுகியதால் மரணம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.

எனினும், மாணவனின் இரத்த மாதிரியைப் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸாரும் அவரின் இரத்த மாதிரியை பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இளங்குன்றனின் உடல் நேற்றிரவு யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பல்கலைக்கழக சமூகத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து அவரது உடல் பருத்தித்துறை, துன்னாலை வடக்கிலுள்ள அவரது இல்லத்துக்கு மருத்துவ பீட மாணவர்களால் கொண்டு செல்லப்படும் என்று சக மாணவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment