ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்றிரவு 8.30 க்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதியால் ஆற்றப்படவுள்ள விசேட உரையை அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலி சேவைகளூடாக ஒளி/ஒலிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ஸ நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.
கடந்த வருடம் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். நவம்பர் 18 ஆம் திகதி அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த நாட்டில் சமூக, பொருளாதார, அரசியல் ஆகிய சகல துறைகளிலும் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திய ஓராண்டாகவே இந்த ஒரு வருட காலப்பகுதி கடந்து சென்றுள்ளது.
நல்லாட்சிக்கான அரசாங்கமாக மக்களின் நலனுக்காக முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் பல இந்த காலகட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் மூலம் செயற்படுத்தப்பட்டதுடன், சுயாதீன பொருளாதாரக் கொள்கை, சகலருக்கும் பொதுவான சட்டம் அதேபோன்று, கல்வி மற்றும் எதிர்கால சந்ததிக்காகவும் வரவேற்கத்தக்க ஆட்சியை இந்த ஓராண்டு காலத்தில் வழங்கியுள்ளார்.
அரச சேவைகளை வலுப்படுத்துதல், தேசத்தை பாதுகாக்கும் தேசிய பொருளாதாரக் கொள்கையுடன் சமய, கலாசார மீள் புதுப்பிக்கத்தக்க செயற்பாடுகள் என்பன கடந்த ஓராண்டு காலத்தில் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட பணிகளாகும்.
உலகளாவிய தொற்றான கொரோனா அச்சத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க விரைந்து செயற்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, தொற்றுக்கு மத்தியில் தொழிலாளர்களை பாதுகாக்க நிதி சலுகைகளை வழங்குதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 ரூபா வழங்குதல், புதிய முயற்சிகளுக்காக நாட்டை திறப்பது உட்பட கொரோனா தொற்றை தடுப்பதற்காக PCR பரிசோதனைகளை அதிகரிக்கவும் ஆலோசனைகளை வழங்கினார்.
No comments:
Post a Comment