(இராஜதுரை ஹஷான்)
ரயில் சேவையில் பயணச்சீட்டு விநியோகம் மற்றும் பயணிகள் தொடர்பான தகவலறிதல் தொடர்பில் முன்வைத்த திட்டங்களை ரயில் திணைக்களம் செயற்படுத்தவில்லை. ரயில் பெட்டியில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளால் தீர்மானிக்க முடியாது. ரயில் சேவையில் காணப்படும் குறைபாடுகள் திருத்திக் கொள்ளாவிடின் பொது பயணிகளின் சுகாதார பாதுகாப்பு சவாலுக்குட்படுத்தப்படும் என ரயில் நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
ரயில் நிலைய அதிபர் சங்க காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றி மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது. சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஆரம்பிக்கப்பட்டன.
இன்று திங்கட்கிழமை 43 அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டன. பல்வேறு பிரதேசத்தில் இருந்து கொழும்பு நகருக்கு இன்று மாத்திரம் 5212 பேர் ரயில் ஊடாக பயணம் செய்துள்ளனர்.
ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தொடர்பில் தகவல் அறிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பயணிகள் தங்களின் சுய விபரங்களை எழுதி போட வேண்டும். பின்னர் ரயில் நிலைய அதிபர் சங்கத்தின் சேவையாளர்கள் தகவல்களை எண்ணிக்கைபடுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment