(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
கொழும்பு, கம்பஹா போன்று தோட்டப் பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவும் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. அதனால் மக்களை பாதுகாக்க தேவையான சுகாதார ஏற்பாடுகளை இந்த பகுதிகளில் அரசாங்கம் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ப. திகாம்பரம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கொவிட் காரணமாக நாட்டின் நிகழ்கால நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்னெச்சரிக்கை விடுத்தபோதும் அரசாங்கம் சிறிதளவும் இதனைக் கண்டுகொள்ளவில்லை. இதன் விளைவையே நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ளது.
நாம் முன்னெச்சரிக்கை செய்தபோதே விமான நிலையத்தை மூடியிருந்தால் பரவலைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். எனினும் அரசாங்கம் தான்தோன்றித் தனமாகச் செயற்பட்டதாலும் அசமந்தப் போக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தமையாலும் தற்பொழுது 25 மாவட்டங்களிலும் வைரஸ் பரவியுள்ளது.
கொழும்பு, கம்பஹா போன்று கொரோனா வேகமாகப் பரவும் அச்சுறுத்தல் காணப்படும் பகுதியாக பெருந்தோட்டப் பகுதிகள் காணப்படுகின்றன. இங்குள்ள மக்கள் லயன்களில் நெருக்கமாக வாழ்கின்றனர். இங்கு கொத்தணியாக தொற்றுக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இதிலிருந்து அம்மக்களைப் பாதுகாக்க பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் மக்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கான மையங்களை அமைப்பதற்கும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கக் கூடிய வசதிகளுடன் வைத்தியசாலைகளை தயார்ப்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment