ஜோ பைடனின் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்காவுடனான உறவுகள் தானாகவே மேம்படும் என்ற மாயையை சீனா கைவிட வேண்டும் என அரசு ஆலோசகர் கூறி உள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது. குறிப்பாக கொரோனாவை கையாளுதல், வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்று ஜனாதிபதி பதவிக்கு தகுதி பெற்றிருக்கிறார்.
அவரது நிர்வாகத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? உள்நாட்டு பிரச்சினைகளை எப்படி தீர்க்கப்போகிறார்? சர்வதேச விவகாரங்களில் அவரது நிலைப்பாடு என்ன? என்பதை அறிய உலக நாடுகள் எதிர்நோக்கி உள்ளன.
ஜோ பைடன் ஜனாதிபதியானால் அமெரிக்கா - சீனா இடையிலான வலுவான உறவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் அமையும் என சீன வல்லுனர்கள் கருதினர்.
இந்நிலையில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கும் பைடன் நிச்சயம் பலவீனமான ஜனாதிபதியாகவே இருப்பார் என சீன அரசின் ஆலோசகர் ஜெங் யோங்னியான் கூறி உள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்காவுடனான அதன் உறவுகள் தானாகவே மேம்படும் என்ற மாயையை சீனா கைவிட வேண்டும்.
அத்துடன், அமெரிக்கா மேற்கொள்ளும் கடுமையான நிலைப்பாட்டை எதிர்கொள்ள சீனா தயாராக இருக்க வேண்டும். நல்ல பழைய நாட்கள் முடிந்துவிட்டன. அமெரிக்காவுடன் பல ஆண்டுகளாக நிலவும் பனிப்போர் ஒரே இரவில் முடிவுக்கு வராது.
பைடன் வெள்ளை மாளிகையில் நுழைந்த பின்னர் சீனா மீதான பொதுமக்களின் கோபத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அமெரிக்க சமூகம் சிதைந்துவிட்டது, இதனை சரி செய்வதறகு பைடனால் ஏதாவது செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை.
பைடன் நிச்சயமாக மிகவும் பலவீனமான ஜனாதிபதியாகவே இருப்பார். எனவே, உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்க முடியாவிட்டால், அவர் ராஜதந்திர ரீதியாக ஏதாவது செய்வார். சீனாவுக்கு எதிராகவும் ஏதாவது செய்வார். ட்ரம்ப் போரில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதியான பைடன் போர்க்களைத் தொடங்குவார். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment