கொரோனா வைரஸ் நோய் தடுப்புக்கான தடுப்பூசி அல்லது அதற்கான நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொள்ளும் வரை நாட்டைப் பாதுகாப்பாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியமுள்ளதென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க நீதிமன்றத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சட்டத்தரணிகளின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு கொழும்பு புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதியில் வைரஸ் தொற்று ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு புதுக்கடை நீதிமன்றத் தொகுதி சுற்றாடலில் வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகள் நேற்றைய தினம் இடம்பெற்றன. அதனை ஆரம்பித்து வைத்து கருத்து தெரிவித்த போதே நீதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களம், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் களஞ்சியப்படுத்தல் பிரிவு ஆகியன இணைந்து மேற்படி நடவடிக்கைகளை ஏற்பாடு செய்திருந்தன.
பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதியின் சுற்றாடலில் நேற்று இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலீஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியப்படுத்தல் பிரிவு தலைவர் மொஹமட் உவைஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment