5,100 பாடசாலைகளில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம், சுகாதார நடைமுறைகளை முன்னெடுக்க நிதி வழங்கப்படும் - கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா - News View

About Us

About Us

Breaking

Sunday, November 22, 2020

5,100 பாடசாலைகளில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம், சுகாதார நடைமுறைகளை முன்னெடுக்க நிதி வழங்கப்படும் - கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா

நாட்டில் உள்ள 10,165 அரசாங்க பாடசாலைகளில் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் வலையத்திற்குள் அமைந்துள்ள பாடசாலைகளைத் தவிர்ந்த 6 தொடக்கம் 13 வரையிலான வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை 5,233 ஆகும். நாட்டில் தற்பொழுது நிலவும் சூழலுக்கு மத்தியில் அனர்த்தம் அதிகளவில் உள்ள கிழக்கு மாகாணத்தில் 5 பாடசாலைகள், வடமேல் மாகாணத்தில், குருநாகல் மாவட்டத்தில் சில பாடசாலைகள், சப்ரகமுவ மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள சில பாடசாலைகள் தவிர்ந்த சுமார் 5,100 பாடசாலைகளில் நாளை (23 ஆம் திகதி) முதல் தரம் 6 தொடக்கம் 13 வரையிலான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அனைத்து மாகாண வலய மற்றும் கோட்டக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாக கல்வி அமைச்சினால் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள 15/2020 என்ற சுற்றறிக்கை மற்றும் வழிகாட்டி ஆலோசனைகளை உள்ளடக்கிய வகையில் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

விசேடமாக இதில் குறிப்பிடப்பட்ட வகையில் சுகாதார மேம்பாட்டு குழுவை முன்னிலைப்படுத்தி மிகவும் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொண்டு பாடசாலைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை 500 இற்கும் குறைவான பாடசாலைகள் 77.3 சதவீதமாகும். 501 தொடக்கம் 1000 வரையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை 13.6 சதவீதமாகும். இதற்கமைவாக மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கையில் 91 சதவீதம். 1000 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலையாகும் என்றும் செயலாளர் கூறினார்.

இதனால் சமூக இடைவெளி உள்ளிட்ட ஏனைய சுகாதார முறைகளைக் கடைப்பிடித்து பாடசாலைகளை முன்னெடுப்பதில் நடைமுறையில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

ஒவ்வொரு பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு சுகாதார நடைமுறைகளை முன்னெடுப்பதற்காக நிதி உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

இதற்கமைவாக 105.812 பில்லியன் ரூபாவை பாடசாலைகளுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment