இந்திய மீனவர்களின் மூலமாகவே கொவிட்-19 இரண்டாம் அலை இலங்கையில் உருவாகியிருக்கும் - பாதுகாப்பு குறித்து பேசும் அரசாங்கம் கடல் எல்லையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை : நிரோஷன் பெரேரா - News View

About Us

About Us

Breaking

Saturday, November 28, 2020

இந்திய மீனவர்களின் மூலமாகவே கொவிட்-19 இரண்டாம் அலை இலங்கையில் உருவாகியிருக்கும் - பாதுகாப்பு குறித்து பேசும் அரசாங்கம் கடல் எல்லையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை : நிரோஷன் பெரேரா

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இந்திய மீனவர்களின் மூலமாக வடக்கு மீனவர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்றி, அதன் மூலமாகவே கொவிட்-19 இரண்டாம் அலை இலங்கையில் உருவாகியிருக்கும் என அனுமானிக்கப்படுவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார். பாதுகாப்பு குறித்து பேசும் அரசாங்கம் எமது கடல் எல்லையை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை, கடற்தொழில், பெருந்தோட்டத்துறை மற்றும் காணி அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் மீன்பிடித்துறை பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. கொவிட்-19 வைரஸ் பரவல் முழுமையாக மீனவர் சமூகத்தை பாதித்துள்ளது. இந்திய மீனவர்கள் எமது கடல் எல்லையில் மீன் பிடிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகின்றது.

மீன் பிடித்துறை அமைச்சை விடவும் பாதுகாப்பு அமைச்சு இந்த விடயத்தில் தலையிட வேண்டும். இந்திய தூதரகத்துடன் பேசி இந்த விடயத்திற்கு தீர்வு ஒன்றினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக மீன்பிடித்துறை அமைச்சர் சபையில் தெரிவித்தார். ஆனால் இந்திய தூதரகத்துடன் பேசுவதில் அர்த்தமில்லை, ஏனெனில் அவர்கள் தொடர்ச்சியாக இந்திய படகுகளை எமது கடல் எல்லைக்குள் செல்ல அனுமதி வழங்கி வருகின்றனர். குறிப்பாக வடக்கு மீனவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் இலங்கையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். எனவே இதனை நீண்ட காலமாக முன்னெடுத்து வந்தும் எம்மால் தடுக்க முடியாது போயுள்ளது. எனவே பாதுகாப்பு அமைச்சர் இதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

அதுமட்டும் அல்ல கொவிட்-19 இரண்டாம் அலை இலங்கையில் உருவாக, இந்திய மீனவர்களும் அவர்களின் மூலமாக வடக்கு மீனவர்களுக்கு தொற்றி வந்திருக்கலாமோ என அனுமானிக்கப்படுகிறது.

எனவே பாதுகாப்பு குறித்து பேசும் அரசாங்கம் எமது கடல் எல்லையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நிலத்தை மட்டுமல்ல, கடல் எல்லையையும் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

எமது கடல் வளம் சுரண்டப்படுகின்றது, மீன் வளம் சுரண்டப்படுகின்றது, போதைப் பொருள் கடத்தல் மற்றும் கொவிட்-19 வைரஸ் பரவலும் ஏற்பட்டு வருகின்றது. இந்த விடயத்தில் இந்தியாவிற்கோ எவருக்குமோ அஞ்சாது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment