அரச பேரூந்தில் பயணிக்கும் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால் 10,000 ரூபா, மரணமடைந்தால் 50,000 ரூபா இழப்பீடு - News View

About Us

About Us

Breaking

Saturday, November 28, 2020

அரச பேரூந்தில் பயணிக்கும் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால் 10,000 ரூபா, மரணமடைந்தால் 50,000 ரூபா இழப்பீடு

(க.பிரசன்னா)

இலங்கை போக்கு வரத்து சபை அறிமுகப்படுத்தியுள்ள கொவிட்-19 பாதுகாப்பு நிதியத்தின் மூலம் அரச பேரூந்தில் பயணிக்கும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபாவும் தொற்றினால் மரணமடைந்தால் 50,000 ரூபாவும் இழப்பீடாக வழங்குவதற்கு இலங்கை போக்கு வரத்து சபை தீர்மானித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கை போக்கு வரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களில் பயணிக்கும் சகல பயணிகளிடமிருந்து அறவிடப்படும் பேரூந்து கட்டணத்திலிருந்து ஒரு ரூபா கொவிட்-19 பாதுகாப்பு நிதியத்துக்கு ஒதுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்கு வரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இலங்கை போக்கு வரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்த பின்னர் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவருக்கு கொவிட்-19 பாதுகாப்பு நிதியத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து இழப்பீட்டை பெற்றுக் கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்த பின்னர் கொரோனா தொற்றுடையவராக அடையாளங் காணப்படும் நபரொருவருக்கு இழப்பீடாக 10,000 ரூபாவும் தொற்றின் மூலம் மரணமடைந்தால் இழப்பீடாக 50,000 ரூபாவும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இழப்பீட்டை பெற்றுக் கொள்வதற்கு பயணிகள் பஸ் கட்டணத்தை செலுத்திய பற்றுச்சீட்டை தம்வசம் வைத்திருப்பது அவசியமாகுமென்பதுடன் இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்ததாலேயே கொவிட் தொற்று ஏற்பட்டதாக கொவிட்-19 தடுப்பு செயலணி, இ.போ.ச. சுகாதார அதிகாரிகள் மற்றும் வைத்தியர் உறுதிப்படுத்திய பின்னரே இழப்பீடு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி போக்கு வரத்துச் சேவைகள் இடம்பெற்று வருவதுடன் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணிப்பவர்கள் தொடர்பான விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பயணிகள் பயணம் செய்த பஸ் தொடர்பான விபரங்களை இலகுவாக பெற்றுக் கொள்ளும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

எனவே பயணிகள் தங்களுடைய விபரங்களை பயணிக்கும் பஸ்களில் கட்டாயம் பதிவு செய்வதுடன் பஸ் கட்டணம் செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டையும் தம்வசம் வைத்திருப்பதும் அவசியமாகும்.

No comments:

Post a Comment