"பொதுச் சுகாதார அவசரகாலச் சட்டம்" வரைபொன்றைத் தயாரித்து அதை தனி நபர் பிரேரணையாக இன்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் எம். ஏ. சுமந்திரன் சமர்ப்பித்துள்ளார்.
இந்தச் சட்டம் அரசாங்கமும், அரச உத்தியோகத்தர்களும் சட்ட பூர்வமான முறையில் நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த உதவும்.
அரசாங்கம் 20 ஆம் திருத்தத்தை நிறைவேற்றுவதை விடுத்து இப்படியான சுகாதார அவசரகாலச் சட்டத்தை இயற்றுவதிலேயே கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
இந்த சட்ட வரைபில் பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்படுவதற்கும் பொது சுகாதார அவசர சபை அமைப்பதற்குமான ஏற்பாடுகள் காணப்படுகின்றன.
பொது சுகாதார அவசரகால நிலையின் இருப்பு அல்லது உடனடித் தன்மையைக் கருத்தில் கொண்டு, பொது சுகாதார நலன்களுக்காக அதைச் செய்வது மிகவும் பயனுள்ளது என பாராளுமன்றம் கருதுவதாக எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வரும் நிலையில் நாட்டில் எதிர்காலத்தில் அதை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக வழங்குவது பயனுள்ளது என்று அதில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் ஒரு பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டால், பொது சுகாதார அவசரநிலைப் பேரவை என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பு அமைப்பதற்கான முன்மொழிவும் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அமைப்பில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சுகாதார, சமூக நலன் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல அமைச்சுக்களை பொறுப்பான அமைச்சர்களைக் கொண்டிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது சுகாதார அவசரகால சட்டத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் எழுத்துப்பூர்வ ஆலோசனையின் பேரில் அமைச்சரால் அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment