மட்டக்களப்பு வாகரை பிரதேச காயான்கேணி கடல் பிரதேசத்தில் சட்டவிரோத கடல் தொழில் நடவடிக்கையில் வெளியூர் பிரதேச மீனவர்கள் ஈடுபடுவதனால் தங்களது நாளாந்த மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச மீனவர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த பல நாட்களாக இவ் நடவடிக்கை இடம்பெற்று வருவாகவும், இதனால் தமது வாழ்வாதரத் தொழிலான கரையோர மீன்பிடி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
டைனமெற் எனும் வெடிப் பொருட்களை பயன்படுத்தி மீன் கூட்டமாக செறிந்து வாழும் கடல் பிரதேசத்தில் வெடிக்கச் செய்து, மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதனால் தமக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
இவ் நடவடிக்கையினால் சிறிய மீன் தொடக்கம் பல வகையான மீன் இனங்கள் அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இறக்கும் மீன்கள் கரையோரங்களை வந்தடைவதனால் கரையோரம் அசுத்தமடைந்து காணப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் காயான்கேணி கடல் பிரதேசமானது அழகான முருகை கல் பாறைகளை தன்னகத்தே கொண்டமைந்த கடல் வளம் கொண்டமைந்த பிரதேசமாகும்.
வெடி பொருட்கள் பாவிப்பதனால் அவையும் சிதைவடையும் நிலை உருவாகியுள்ளது. சுற்றுலா பயணிகள் இவற்றினை அதிகம் விரும்பி பார்க்க செல்லும் இடமாக காயான்கேணி கடல் பிரதேசம் காணப்படுகிறது.
எனவே, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ்வாறான நடவடிக்கையினை தடுத்து நிறுத்த உதவுமாறு பிரதேச மீனவர்கள் கோருகின்றனர்.
வீரகேசரி
No comments:
Post a Comment