உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தெரிவிப்பதற்கு பல விடயங்கள் உள்ளன என தெரிவித்துள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர எதிர்காலத்தில் அவற்றை பகிரங்கப்படுத்துவதற்கு தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதுவரை நான் எங்கும் தெரிவிக்காத விடயங்களை ஆணைக்குழுவின் விசாரணையின் இறுதி நாட்களில் வெளிப்படுத்த தயார் என குறிப்பிட்டுள்ள அவர் ஆணைக்குழு அனுமதி வழங்கினால் நான் அவற்றை வெளிப்படுத்துவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க முயலாமைக்காக பொலிஸாரின் மேல் மாத்திரம் குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது பொலிஸாருக்கு கூட்டுப் பொறுப்புணர்வே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல நெருக்கடிகளின் மத்தியில் நானும் எனது கீழ் பணி புரிந்த அதிகாரிகளும் மிகவும் அர்ப்பணிப்புடன் பணி புரிந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உதவியையும் புலனாய்வு தகவல்களையும் வழங்கியவர்களிடமிருந்து திடீரென ஒத்துழைப்பு குறித்தும் உரிய விசாரணைகள் இல்லாதது குறித்தும் பணம் வெளிநாட்டு நிதி மற்றும் அரசியல் குறித்தும் ஆழமாக ஆராய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் என்னை தேசிய பாதுகாப்பு பேரவையின் கூட்டத்திற்கு அழைக்கவில்லை என தெரிவித்துள்ள பூஜித் ஜயசுந்தர விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தமை இதன் காரணமாக அவர்கள் மத்தியில் ஏற்பட்ட உளவியல் தாக்கங்கள் குறித்தும் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment