(க.பிரசன்னா)
உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ள இரு ஆலோசனைகளில் ஒன்றையே அரசாங்கம் தற்போதும் பின்பற்றி வருவதாகவும் மரணமடைந்தவர்களின் உடல்களை எரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், 20 ஆவது திருத்தத்துக்குப் பின்னர் நாட்டில் கொரோனா பரவும் நிலைமை அதிகரித்து செல்கின்றது. வைத்தியசாலைகளில் கூட தொற்றாளர்களை தங்கவைப்பதற்கு இடமில்லாத நிலை உருவாகியுள்ளது.
அரசாங்கம் உருவாக்கியுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் போதாத நிலையில், வீட்டிலேயே தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. கொரோனா நோய் நிலைமையின் காரணமாக மக்களுக்கு உணவுக்குக்கூட வழியில்லாத நிலைமை ஏற்படுமென்று எல்லோருக்கும் தெரிந்து விட்டது.
அதேவேளை கொரோனாவினால் ஏற்படும் மரணங்களின் பின்னர் உடலை அடக்கம் செய்வதில் அரசாங்கம் பழைய முறையினையே பின்பற்றி வருகின்றது. உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ள இரு ஆலோசனைகளில் ஒன்றையே அரசாங்கம் இன்னும் பின்பற்றி வருகின்றது. மரணமடைந்தவர்களின் உடல்களை எரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கின்றது.
இந்நாட்டில் தங்களுடைய நம்பிக்கையின் படியும் மார்க்க கடமைகளின்படியும் உடலை அடக்கம் செய்யும் சமூகங்களும் இருக்கின்றது. ஆனால் அதற்கு அரசாங்கம் இடம்கொடுக்காமலும் தீர்வை வழங்காமலும் எரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றது. இதனை வன்மையாக கண்டிக்கின்றோம் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment