கொழும்பு - மாளிகாவத்தையில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு தொகுதி ஒன்றுக்கருகில் நடத்தப்பட்ட பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாகந்துரே மதுஷின் இறுதிக்கிரியை இன்று (21) மாலை இடம்பெறவுள்ளது.
பிரேத பரிசோதனையை அடுத்து மாகந்துரே மதுஷின் சடலம் அவரது மனைவியிடம் நேற்று (20) மாலை ஒப்படைக்கப்பட்டது.
அதனையடுத்து, மஹரகம தும்ரியபொல மாவத்தையில் அமைந்துள்ள அன்னாரின் வீட்டிற்கு பூதவுடல் நேற்றிரவு கொண்டு செல்லப்பட்டது.
இன்று மாலை மஹரகம கொடிகமுவ பொது மயானத்தில் இறுதிக்கிரியை இடம்பெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மாகந்துரே மதுஷ் என அழைக்கப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஷித்த என்பவர், 2006 ஆம் ஆண்டு தென் மாகாண சபையில் உறுப்பினராக செயற்பட்ட டெனீ ஹித்தெட்டிய கொல்லப்பட்டமை உள்ளிட்ட மேலும் பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதுடன் திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடையவராவார்.
41 வயதான மாகந்துரே மதுஷ், கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி துபாயில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போது துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கடந்த வருடம் மே மாதம் 5ஆதிகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
அதன்பின்னர், அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் இருந்ததுடன் அவரிடம் நீண்ட காலமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
சந்தேக நபர், கடந்த 16 ஆம் திகதியன்று மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment