ரிஷாட் பதியுதீன் விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் கவனம் செலுத்தி நீதியினை வழங்க வேண்டும் - அலி சப்ரி ரஹீம் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 17, 2020

ரிஷாட் பதியுதீன் விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் கவனம் செலுத்தி நீதியினை வழங்க வேண்டும் - அலி சப்ரி ரஹீம்

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் விடயத்தில் அரசு நீதியாக நடந்துகொள்ள வேண்டும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வசித்து வரும் மக்கள், தமது வாக்குகளை மன்னாரில் அளிப்பதற்காக ´வடக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கான அமைப்பின்´ நிதி ஒதுக்கீட்டில், அரச பேரூந்தில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர், அப்பணம் மீள அவ்வமைப்பினால் அரசுக்கு செலுத்தப்பட்டது.

இதன் பின்னரும், தொடர்ந்து இது தொடர்பில் தற்போது இடம்பெற்று வரும் விடயங்கள் குறித்து, சிறுபான்மைச் சமூகம் மத்தியில் அரசாங்கம் தொடர்பிலும் தப்பான கருத்துக்கள் உளவுகின்றன. 

ஆகையால், இந்த விடயம் தொடர்பில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனம் செலுத்தி, நீதியினை வழங்க வேண்டும் என மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரின் பணிப்பின் பேரில், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, வடக்கில் வாக்குப் பதிவுகளை கொண்டு புத்தளத்தில் வசித்துவரும் 12,000 வாக்காளர்களுக்கு வாக்களிக்க எற்பாடு செய்து கொடுக்குமாறு, வடக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கான அமைப்புக்கு வழங்கப்பட்ட பணிப்புரைக்கமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு இந்த நிதி அவ்வமைப்பின் மூலம் வழங்கப்பட்டு, ஏற்பாடுகள் முடிவடைந்த நிலையில், இதற்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாட்டினையடுத்து, தற்போது முன்னடுக்கப்பட்டு வரும் கைதுகள் தொடர்பில், மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. 

ஒரு ஜனநாயக நாட்டின் வாக்களிப்பு உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவே நான் கருதுகின்றேன்.

எனவே, தற்போது இடம்பெற்று வரும் இந்த செயற்பாடுகளால், சிறுபான்மை மக்கள் மத்தியில் அரசாங்கம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை நிவர்த்திப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசு உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும். 

அதனை விடுத்து அதிகாரிகள் நீதியினை நிலைநாட்டாது, அதற்கு அப்பால் சென்று செயற்படுவதானது கவலையளிக்கிறது. அதனை அரசு கண்டித்து, நீதியினை நிலைநிறுத்த பணிப்புரை வழங்க வேண்டும் என தயவாய் கேட்டுக் கொள்கிறேன்´ என்றார்.

புத்தளம் நிருபர் ரஸ்மின்

No comments:

Post a Comment