(எம்.மனோசித்ரா)
அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அத்துமீறிய தலையீடுகளால் இலங்கையின் இறையாண்மைக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தங்கள் கைசாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறித்து வினவிய போது அதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் எமது நாட்டின் பொருளாதாரத்திற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் தலையிட்டுள்ளன. இது மிகவும் தெளிவாகிறது. கடந்த காலங்களிலும் இவ்வாறான நிலைமையை அவதானிக்க முடிந்தது. அதே போன்று தற்போதும் நடக்கிறது.
அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் விரைவில் நாட்டுக்கு வரவிருப்பதாக கூறப்படுகிறது. சீன உயர்மட்ட குழுவொன்று கடந்த வாரம் வந்து சென்றுள்ளது.
இறுதியில் எமது நாட்டின் பொருளாதாரமும் இறையான்மையும் இவ்வாறான வெளிநாட்டு தலையீடுகளுக்கு அடிபணிந்து நாட்டின் எதிர்காலம் அவர்களிடம் கையளிக்கப்படுகிறது. வெளிநாடுகள் தேவையான செயற்பாடுகளை நாட்டுக்குள் முன்னெடுப்பதற்கு எமது அரசாங்கம் பாதையமைத்துக் கொடுத்திருக்கிறது அதுவே தற்போது இடம்பெற்றுள்ளது என்றார்.
No comments:
Post a Comment