(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிநுட்ப அதிகாரிகள் இன்னமும் இலங்கையில் உள்ளனரா? அவர்களுக்கு முறையான பரிசோதனைகள், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதா என்ற உண்மையை அரசாங்கம் சபைக்கு அறிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை சபை அமர்வுகளின் போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இந்த கேள்விகளை எழுப்பினார்.
அவர் கூறுகையில், பிரெண்டிஸ் நிறுவனத்தில் பணி புரிந்த ஊழியருக்கு செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதியளவில் கொரோனா வைரஸ் தொற்றியிருக்க வேண்டும் என ஊடகங்கள் மூலமாக அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
அதேபோல் 27 ஆம் திகதியளவில் நிறுவனத்தில் குறிப்பிட்ட சில எண்ணிக்கையானவர்களுக்கு காய்ச்சலும் இருந்ததாகவும் ஆனால் இது குறித்து நிறுவன முகாமைத்துவம் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என அந்த நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவரும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட துணிகளில்தான் ஆடை தைத்ததாகவும் கூறப்படுகின்றது.
மேலும் கடந்த மாதம் 22 ஆம் திகதி இந்தியாவில் இருந்து தொழிநுட்ப குழு ஒன்று மத்தள விமான நிலையத்திற்கு வந்துள்ளனர், இதற்கும் அப்பால் மேலும் இரண்டு விமானங்களில் இந்திய அதிகாரிகள், தொழிநுட்ப ஊழியர்கள் சிலர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
எனவே இவர்கள் முறையாக தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டனரா? அவர்கள் இன்னமும் இலங்கையில் உள்ளனரா? அப்படி தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் எங்கு எப்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர் எனவும் அவர்கள் பெயர் உள்ளிட்ட முழுமையான தகவல்களை பாராளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என சுகாதார அமைச்சரிடமும், கொவிட் செயலணியிடமும் கேட்டுக்கொள்கிறோம் எனவும் அவர் சபையில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment