யாழ். வடமராட்சியில் மீனவர்கள் உட்பட 90 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்! - News View

About Us

About Us

Breaking

Saturday, October 3, 2020

யாழ். வடமராட்சியில் மீனவர்கள் உட்பட 90 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

குடாரப்பு கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடன் நெருக்கமாகப் பழகினர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வடமராட்சியைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேர் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், 9 பேருடன் தொடர்புடைய வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த 70 பேர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மன்னாரைச் சேர்ந்த 11 பேரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் வாடி அமைத்து கடலட்டை பிடிக்கும் தொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்களில் 9 பேர் 3 படகுகளில் கடந்த 29ஆம் திகதி கடலுக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் சென்ற படகு ஒன்று இந்திய இழுவைப் படகுடன் மோதியதில் மீனவர் ஒருவர் கடலில் தவறி வீழ்ந்துள்ளார். அவரை ஏனைய மீனவர்கள் இணைந்து காப்பாற்றியுள்ளனர்.

இந்த நிலையில் கரை திரும்பிய 9 மீனவர்களும் வாடியில் உள்ள ஏனையவர்களுக்கு நடந்தவற்றைத் தெரிவித்துள்ளனர். அதனால் இந்திய மீனவர்களுடன் பழகிவிட்டு வந்துள்ளனர் என்ற அச்சம் கொண்ட மன்னாரைச் சேர்ந்த 11 மீனவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

இந்த விடயம் சுகாதாரப் பகுதியினருக்குத் தெரிய வர, தனிமைப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கடலுக்குச் சென்று திரும்பிய 9 மீனவர்களும் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் (இராணுவ முகாமில் அமைந்துள்ளது) தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 9 பேருடன் வாடியில் நெருங்கிப் பழகிய 81 பேரில் 70 பேர் வடமராட்சி கிழக்கிலும் 11 பேர் மன்னாரிலும் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வட மாகாண சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய பொதுச் சுகாதாரப் பரிசோதர்களால் கண்காணிக்கப்படவுள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தனர்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment