கந்தளாயில் யுவதிக்கு கொரோனா - 41 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Friday, October 9, 2020

கந்தளாயில் யுவதிக்கு கொரோனா - 41 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு, 41 பேர் தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும், மேலும் ஐவர் பி.சி.ஆர். பரிசோதனைக்குட்படுத்த உள்ளதாகவும் கந்தளாய் பிரதேச செயலாளர் தெரிவித்தார். 

கந்தளாய் பிரதேசத்தின் கொரோனா தொடர்பாக ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (9) கந்தளாய் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே இந்த தகவலை தெளிவுபடுத்தினார். 

இவை தொடர்பாக அவர் மேலும் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துகையில், கந்தளாய் பிரதேசத்தில் அண்மைக் காலமாக கொரோனா தொடர்பாக முரணான தகவல்கள் பரப்பப்பட்டதையடுத்தே ஊடகங்கள் ஊடாக உண்மையான தகவல்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலே கந்தளாய் பிரதேச கொரோனா குழு ஊடாக ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்த எண்ணியதாகவும் கந்தளாய் பிரதேச செயலாளர் தெரிவித்தார். 

கொரோனா இரண்டாம் அலை மூலமாக கந்தளாய் பிரதேசத்தில் யூனிட் 11, கந்தளாவ பகுதியைச் சேர்ந்த யுவதியொருவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் மற்றும் 41 பாடசாலை மாணவர்களை தனிமைப்படுத்தியுள்ளதாகவும், இம்மாணவர்கள் கந்தளாய் பகுதியிலிருந்து கம்பஹா பகுதிக்கு தனியார் வகுப்புக்கு சென்றவர்கள் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் ஐந்து பேர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும் இச்செயற்பாடுகளை கந்தளாய் பொதுச் சுகாதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கந்தளாய் பிரதேச செயலாளர் தெளிவுபடுத்தினார். 

கந்தளாயில் பொதுமக்களை முகக் கவசம் அணியுமாறும் அனைத்து பொது இடங்களிலும் பொதுமக்களுக்காக வேண்டி கைகளை சுத்தப்படுத்துவதற்கான உபகரணங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், கந்தளாய் பொலிஸார், சிவில் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுத்து வருவதாகவும் இதன் போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment