20 வது திருத்தத்தினால் ஏற்படத்தக்க சவால்களை அரசாங்கம் மீள் மதிப்பீடு செய்வது அவசியமாகும் - சமூக நீதிக்கான தேசிய இயக்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 10, 2020

20 வது திருத்தத்தினால் ஏற்படத்தக்க சவால்களை அரசாங்கம் மீள் மதிப்பீடு செய்வது அவசியமாகும் - சமூக நீதிக்கான தேசிய இயக்கம்

(நா.தனுஜா) 

அரசியலமைப்பின் 17 வது திருத்தம் நடைமுறையில் இருந்தபோதே உலகின் மிகவும் மோசமான பயங்கரவாதக் குழுவை இலங்கை தோற்கடித்தது. அதேபோன்று 19 வது திருத்தம் நடைமுறையிலுள்ள போதே போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதியினால் மேற்கொள்ள முடிந்தது. எனவே தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தினால் ஏற்படத்தக்க சவால்களை அரசாங்கம் மீள் மதிப்பீடு செய்வது அவசியமாகும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியிருக்கிறது. 

கொவிட்-19 வைரஸ் தொற்றுப்பரவல் நெருக்கடி நிலையின் மத்தியில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயலாற்றுவது அவசியம் என்பதை வலியுறுத்தி சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது அண்மையில் எதிர்பாராத விதமாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பைத் தொடர்ந்து நாம் பாரிய சுகாதார நெருக்கடி நிலையொன்றுக்கு முகங்கொடுத்திருக்கிறோம். 

இந்த நெருக்கடி இலங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை. மாறாக இது 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து சர்வதேச நாடுகள் அனைத்திற்குமான சவாலாகவே இருந்து வருகிறது. இச்சவாலை எதிர்கொள்வதற்கும் எமது சமூகத்தை இதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் ஒவ்வொரு பிரஜையும் உரியவாறான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி, தமது பங்களிப்பினை வழங்க வேண்டியது மிகவும் அவசியமானதாக இருக்கின்றது. 

இது விடயத்தில் அனைத்துத் தரப்புக்களுடனான தொடர்பையும் ஒத்துழைப்பையும் உறுதி செய்யும் அதேவேளை, சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் உதவியுடன் முக்கியமானதொரு மைய நிலை பங்களிப்பை அரசாங்கம் செய்ய வேண்டியிருக்கிறது. 

அதேவேளை பல்வேறு புதிய சவால்களைத் தோற்றுவித்திருக்கும் இந்தத் தொற்று நோய்ப் பரவலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகள், மதத் தலைவர்கள், வணிகங்கள், சிவில் சமூகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பும் சமளவில் பொறுப்பேற்றுச் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்த விரும்புகின்றோம். 

அதேவேளை அரசியலமைப்பின் 19 வது திருத்தம் நடைமுறையில் இருக்கும்போதே ஆரம்பத்திலேற்பட்ட கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கத்தினால் எடுக் கமுடிந்தமை மற்றும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் அதன் விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் நடவடிக்கை எடுக்க முடிந்தமையை நாம் அவதானித்திருக்கின்றோம். 

அதுமாத்திரமன்றி அரசியலமைப்பின் 17 வது திருத்தம் நடைமுறையில் இருந்தபோதே உலகின் மிகவும் மோசமான பயங்கரவாதக் குழுவை இலங்கை தோற்கடித்தது. எனவே தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தினால் ஏற்படத்தக்க சவால்களை அரசாங்கம் மீண்டுமொரு தடவை மதிப்பீடு செய்வதுடன் அனைத்து தரப்பினருடனான கலந்துரையாடல் ஊடாக புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆளுந்தரப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளமையையும் நினைவுபடுத்த விரும்புகின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment