20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை விட கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து நாட்டை பாதுகாப்பதே முக்கியமானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அவசரமாக நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கப்பட்டால் அதனூடாக அரசாங்கத்தின் சுயநலமான போக்கை தெரிந்து கொள்ள முடியும்.
சர்வாதிகார ஆட்சிக்கான பண்புகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு நாங்கள் எப்போதுமே இணக்கம் தெரிவிக்கப் போவதில்லை. 20 தொடர்பான இரண்டாம் கட்ட வாசிப்புகள் பாராளுமன்றத்தில் ஆரம்பமானவுடன் எதிர்ப்பை வெளியிடுவோம்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் வைரஸ் பரவலலிலிருந்து நாம் பாதுகாப்பாக இருப்பது தொடர்பிலே சிந்திக்க வேண்டும். வைரஸ் பரவலின் காரணமாக 20 இற்கு எதிராக ஏற்பாடு செய்திருந்த பேரணிகள் மற்றும் ஆர்பாட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய சூழ்நிலையில் 20 ஐ விட வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதே மிக முக்கியமானதாகவும். எவ்வாறாயினும் பாராளுமன்றத்திற்குள் 20 இற்கு கடும் எதிர்ப்பை வெளியிடுவோம் என்றார்.
No comments:
Post a Comment