(செ.தேன்மொழி)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் கீழ் நாட்டின் மீது அக்கறை கொண்ட எவரும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆதரிக்கமாட்டார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாடு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பிலே தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
தற்போதுள்ள சூழ்நிலையில் அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் கவனம் செலுத்துவது பொருத்தமற்ற விடயமாகும். தற்போது நாடு இருக்கும் நிலைமையில் 20 ஆவது திருத்த சட்டமூலத்தை விட நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பிலே சிந்தித்து செயற்பட வேண்டும்.
இதேவேளை வைரஸ் பரவலின் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தாது 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
இந்நிலையில் இந்த திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டாலும் நாட்டின் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ள எந்த உறுப்பினர்களும் அதற்கு ஆதரவளிப்பார்கள் என்று எண்ணவில்லை என்றார்.
No comments:
Post a Comment