அமெரிக்க பெண் கவிஞரான லுயிஸ் குலுக் 2020ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.
“அவரது தவறற்ற கவிதைக் குரலின் அபாரமான அழகு தனிப்பட்ட இருப்பை பிரபஞ்சமயமாக்குகிறது” என்று இந்த விருதை அறிவித்த நோபல் குழு பாராட்டியுள்ளது.
டைனமைட் கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான அல்பிரெட் நோபலின் பெயரில் 1901 ஆம் ஆண்டு தொடக்கம் வழங்கப்பட்டு வரும் நோபல் விருதில் லுயிஸ் குலுக் 1.1 மில்லியன் டொலர் பரிசுத் தொகையை வென்றுள்ளார்.
இந்த வார ஆரம்பத்தில் மருத்துவம், பெளதீகம் மற்றும் இராசாயனத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு இன்று வெளியிடப்பட்டது.
எனினும் கடந்த பல ஆண்டுகளாக இலக்கியத்திற்கான நோபல் பரிசு சர்ச்சையை ஏற்படுத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டு இந்த விருது ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் 2019 இல் இரு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அதிக விற்பனை கொண்ட பிரபல இலக்கியவாதிகளை நோபல் குழு தவிர்த்து வருவதோடு, அதிகம் அறியப்படாத இலக்கியவாதிகள் மீது கவனம் செலுத்துவதை அவதானிக்க முடிகிறது.
கடந்த ஆண்டு வெற்றியாளரான ஆஸ்திரிய நாட்டின் எழுத்தாளரான பீட்டர் ஹான்ட்கே மீது பரவலாக விமர்சனங்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.
1943 ஆம் ஆண்டு நியூயோர்க்கில் பிறந்த லுயிஸ் குலுக் 1968 ஆம் ஆண்டில் ‘பர்ஸ்ட் பார்ன்’ என்ற கவிதை மூலம் அறிமுகமானார்.
பின்னர் அமெரிக்க சமகால இலக்கியத்தில் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராக பாராட்டபபட்டார். அவர் 12 கவிதைத் தொகுப்புகளையும், கவிதைகள் குறித்த சில கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

No comments:
Post a Comment