பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனம் 1200 கோடி ரூபாய் மோசடி - பாதிக்கப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Monday, October 5, 2020

பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனம் 1200 கோடி ரூபாய் மோசடி - பாதிக்கப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்

பாறுக் ஷிஹான்

பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன மோசடி தொடர்பில் உரிய அதிகாரிகள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியும் எவ்வித பலமிக்க நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.

பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனத்தில் நிதி மோசடி தொடர்பாக இடம்பெற்ற செய்தியாளர் மாநாடு சாய்ந்தமருது தனியார் மண்டபத்தில் இன்று (5) இடம்பெற்றபோது பாதிக்கபப்பட்டவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

மேலும் கருத்து தெரிவித்ததாவது நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த குறித்த நிதி நிறுவனம் கடந்த 06 வருடங்களாக கிழக்கு மாகாணம் உள்ளடங்களாக கிளைகளை ஆரம்பித்து இஸ்லாத்தை முன்னிறுத்தி சில மௌலவிகளின் ஆசிர்வாதத்துடன் எமது மக்களை பகடைக்காய்களாக்கி ஏமாற்றியுள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் கிளையில் பண வைப்பு செய்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் குறிப்பாக கிழக்கின் முக்கிய நகரங்களில் கிளைகளை கொண்டு இயங்கிய இந்நிறுவனம் கல்முனை மருதமுனை சம்மாந்துறை பொத்துவில் உள்ளிட்ட பிரதேசங்கள் முழுவதிலும் மொத்தமாக 200 கோடி ரூபாயை தற்போது மோசடி செய்துள்ளதுடன் நாடளாவிய ரீதியில் 1200 கோடி ரூபாய் அளவில் அவர்கள் மோசடி செய்துள்ளனர்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் என பலருக்கும் அறிவித்தும் எவ்வித பலமிக்க நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை மேலும் கடந்த ஒரு வருட காலமாக எந்தவித முதலீட்டு இலாபங்களையோ அல்லது எங்களின் முதலீட்டையோ தராமல் ஏமாற்றி வருகிறார்கள் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நியாஸ் என்பவர் குற்றஞ்சாட்டினார்.

இது தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை மீள வழங்குவதற்காக குறித்த நிறுவனம் வழங்கிய காசோலைகள் யாவும் மூடப்பட்ட கணக்கின் காசோலை என அறிய வந்துள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கூட எமது பணத்தை பயன்படுத்தி அவர்கள் போட்டியிட்டுள்ளனர்.

இந்நிறுவனம் மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாமல் இயங்கிதை அறிந்து அது குறித்து விசாரித்த போது மத்திய வங்கியில் பதிவு செய்தால் வாடிக்கையாளர்களுக்கு இலாபம் கூடுதலாக வழங்க முடியாது என்று கதையளந்தார்கள். இதற்கு இல்லாமிய சில வரைவிலக்கணங்களை உதாரணம் காட்டி சில மௌலவிகளின் உடந்தையுடன் எம்மை ஏமாற்றி விட்டனர் என கூறினர்.

எனவே பாதிக்கப்பட்டவர்கள் இன்று அன்றாட வாழ்க்கையை தொலைத்துள்ள நிலையில் இவ்விடயம் குறித்து எமது ஜனாதிபதி, பிரதமர் அடங்கலாக அரசின் முக்கியஸ்தர்கள், உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்தனர்.

No comments:

Post a Comment