MT New Diamond கப்பலில் பணியாற்றிய 20 பேர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் .
இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலில் அவர்கள் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
MT New Diamond கப்பலில் தீ பரவியதை அடுத்து, அதிலிருந்து மீட்கப்பட்ட பணியாளர்கள் இலங்கை கடற்படைக்கு சொந்தமான சிதுரல கப்பலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களை இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து தனிமைப்படுத்தலுக்காக காலிக்கு அழைத்துச் செல்லவுள்ளதாக கடற்படைத் தளபதி கூறினார்.
அம்பாறை - சங்கமன்கண்டி கரையிலிருந்து 30 கடல் மைல் தூரத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் பலத்த காற்று வீசுவதாகவும், இதனால் கப்பலின் உட்புறத்தில் கட்டுபடுத்தப்பட்ட தீ நேற்று மாலை தொடக்கம் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டார்.
குறித்த கப்பலில் இன்றும் இடைக்கிடையே தீ பரவியதாகவும் தொடர்ந்தும் தீயைக் கட்டுப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment