நாடு விட்டுவிட்டு பெய்யும் மழையை சந்திப்பதால் பொதுமக்கள் டெங்கு, எலிக் காய்ச்சல், இரைப்பை நோய்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
வழக்கமாக ஜூன், ஜூலை மற்றும் நவம்பர் தொடக்கம் ஜனவரி வரையான காலப்பகுதிகளில் டெங்கு நோயாளர்களின் உச்சத்தை நாடு எதிர்கொள்கிறது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்க நிறைவேற்று குழு அங்கத்தவர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.
வயல் அறுவடை மற்றும் ஈரத்தரைகளில் மக்கள் செயற்படும்போது மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். மழை வெள்ளத்தின் போது ஏற்படும் வயிற்றுப்போக்கு, ஏனைய இரைப்பை நோய்களிலிருந்து பொதுமக்கள் தம்மை தற்காக்க கொதித்தாறிய நீரைப் பருகுவதுடன் நன்கு சமைத்த உணவை உண்ண வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் திறமையான செயற்பாட்டால் டெங்கு மரணங்கள் கடந்த பல வருடங்களில் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது டெங்கு மரணங்கள் ஒரு வீதத்தை விட குறைந்துள்ளன. எப்படியாயினும் தாய்லாந்து போன்ற நாடுகளில் நுளம்பினால் பரவும் நோய்கள் 0.01 வீதம் மட்டுமே உள்ளன.
சுகாதார அமைச்சின் தகவல்களின் படி டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஜனவரி முதல் இவ்வாண்டு செப்டெம்பர் 17 வரை 27,201 ஆக இருந்ததுடன் இதன் போதான டெங்கு மரணங்கள் 33 ஆகும். செப்டெம்பர் தொடக்கம் செப்டெம்பர் 17 வரை 668 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை எலிக் காய்ச்சலால் 5632 நோயாளர்கள் ஆண்டின் தொடக்கம் முதல் செப்டெம்பர் 17 வரையான காலப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே காலப்பகுதியில் எலிக்காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆகும்.
No comments:
Post a Comment