(க.பிரசன்னா)
தங்க ஆபரண உற்பத்திக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி வரி 15 வீதத்தால் குறைக்கப்பட்டமையினால் ஏற்றுமதியில் அபிவிருத்தி ஏற்படுமென்றும் விலைக் குறைப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்படாதென்றும் அகில இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது தங்கம் ஒரு பவுனுக்கு மொத்த சராசரி விலையாக ஒரு இலட்சம் ரூபாவாக காணப்பட்டாலும் இறக்குமதி வரி 15 வீதம் குறைக்கப்பட்டமையானது, விலையின் மீது பாரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. பாரியளவில் விலை குறையுமென மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். அவ்வாறு நிகழ வாய்ப்பில்லை.
கடந்த 3 வருடங்களாக தங்கம் இறக்குமதி செய்யப்படவில்லை. இறக்குமதி இல்லாததன் காரணமாக சர்வதேச விலையின் அடிப்படையிலேயே இங்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உள்ளுர் தங்கமே சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே வரி நீக்கத்தின் காரணமாக விலையில் சிறியளவு மாற்றங்கள் நிகழக்கூடுமே தவிர பாரிய மாற்றங்கள் ஏற்படாது.
துபாயை விட இலங்கையில் தங்க விலை 15 வீதம் அதிகமாகும். இறக்குமதி வரி குறைப்பினால் ஏற்றுமதியில் அதிகரிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. அத்துடன் இலகுவாக தங்கம் கிடைக்கின்ற நிலைமை ஏற்படுவதோடு சர்வதேச ரீதியில் இலங்கை தங்கமும் போட்டிப்போடக் கூடியதொரு நிலை உருவாகும் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment