ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, 33 வயது பெண் ஒருவர் கண்டியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்ததைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டதாக கூறும் பெண்ணொருவரே இவ்வாறு கண்டி பொலிஸ் நிலைய, போதைப் பொருள் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (01) கண்டி ஆஸ்பத்திரி வீதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் குறித்த சந்தேகநபரான பெண் கைதாகியுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடமிருந்து 7 1/2 இலட்சம் ரூபா பெறுமதியான 62.35 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 50 ஆயிரத்து 820 ரூபா (ரூ. 50,820.00 பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இராஜங்கனை பிரதேசத்தில் வசிக்கும் குறித்த பெண், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு சிறையில் சந்தித்த பெண்ணின் ஆலோசனையின் பேரில் அவர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த பெண் தொடர்பிலான மேலதிக விசாரணைகள், கண்டி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுதத் மாசிங்கவினது வழிகாட்டலின் கீழ், கண்டி பொலிஸ் நிலைய போதை குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
(எம்.ஏ. அமீனுல்லா, ஜே.எம். ஹபீஸ்)
No comments:
Post a Comment