மரண தணடனைக் கைதி எம்.பியாவதற்கு அனுமதித்துள்ள நிலையில், தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வளித்து ஏன் விடுவிக்க முடியாது - வினோ நோகராதலிங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, September 11, 2020

மரண தணடனைக் கைதி எம்.பியாவதற்கு அனுமதித்துள்ள நிலையில், தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வளித்து ஏன் விடுவிக்க முடியாது - வினோ நோகராதலிங்கம்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

மரண தணடனைக் கைதி ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு நீதிமன்றமும் பாராளுமன்றமும் அனுமதித்துள்ள நிலையில் நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வளித்தாவது ஏன் விடுவிக்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வினோ நோகராதலிங்கம் கேள்வி எழுப்பினார். 

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உற்பத்தி, சுங்க, துறைமுக வரிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். 

அவர் மேலும் கூறுகையில், தமிழ் அரசியல் கைதிகள் பல வருடங்களாக சிறிகளில் வாடி வருகின்றனர். தம்மை விடுவிக்குமாறு அல்லது வழக்குகளைத் தொடருமாறு கோரி இவர்கள் எத்தனையோ தடவைகள் உண்ணாவிரதப் போராட்டங்களையும் மேற்கொண்டுள்ளனர். ஆனால் இவர்கள் தொடர்பில் எந்த அரசும் அக்கறை காட்டவில்லை. இதனால் பலர் சிறைகளினுள்ளேயே இறந்து விட்டனர். எஞ்சி இருப்போரும் தமது ஆத்ம பலத்தை இழந்து வருகின்றனர். 

அண்மையில் இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜெயசேகரவை பாராளுமன்ற உறுப்பினராக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றமும் பாராளுமன்றமும் அனுமதியளித்து அவரும் பாராளுமன்றம் வந்து எம்.பி.யாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். ஆனால் தமிழ் அரசியல் கைதிகளை மட்டும் விடுவிக்க அரசும் நீதிமன்றங்களும் மறுக்கின்றன. 

இந்த தமிழ் அரசியல் கைதிகள் பாராளுமன்றத்துக்கு தாங்கள் வர வேண்டுமென்று கேட்கவில்லை. தங்கள் குடும்பங்களுடன் ஒன்று சேரவே கேட்கின்றனர். எனவே மரண தண்டனை பெற்ற கைதிக்கு எம்.பி.யாக அனுமதியளித்த அரசு, நீதிமன்றம், பாராளுமன்றம் என்பன இந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்தாவது விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment