இன்று முதல் பஸ் முன்னுரிமை ஒழுங்கையில் பயணிகள் போக்குவரத்து பஸ், பாடசாலை சேவை பஸ், வேன், அலுவலக சேவை பஸ் ஆகியன மாத்திரம் பயணிக்க வேண்டும் என, பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 14ஆம் திகதி முதல் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதான நான்கு வீதிகளை இலக்காக கொண்டு வீதி ஒழுங்கைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய ஹைலெவல் வீதியில் நுகேகொடை அனுலா வித்தியாலயத்திற்கு அருகிலிருந்து பித்தளை சந்தி வரையும், பேஸ்லைன் வீதியில் களனி பாலத்திலிருந்து ஹைலெவல் பேஸ்லைன் சந்தி வரையும், காலி வீதியில் வெள்ளவத்தை வில்லியம் சந்தியிலிருந்து காலிமுகத்திடல் சுற்றுவட்டம் வரையும், பாராளுமன்ற வீதியில் பொல்துவ சந்தியிலிருந்து லிபர்ட்டி சுற்றுவட்டம் வரையும் வீதி ஒழுங்கைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் பஸ் முன்னுரிமை ஒழுங்கையை தவிர, மற்றைய ஒழுங்கையை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment