ஒற்றையாட்சியை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம், எங்கள் தமிழ் தேசத்தை அங்கீகரியுங்கள் : செல்வராஜா கஜேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Friday, September 11, 2020

ஒற்றையாட்சியை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம், எங்கள் தமிழ் தேசத்தை அங்கீகரியுங்கள் : செல்வராஜா கஜேந்திரன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

ஒற்றையாட்சியை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எனவே ஒற்றையாட்சிக்குள் உள்ள எந்தவொரு தீர்வும் எங்களுக்குரிய தீர்வாக இருக்க முடியாது. எனவே எங்கள் தமிழ் தேசத்தை அங்கீகரியுங்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட எம்.பி. செல்வராஜா கஜேந்திரன் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய தேசத்தில் எங்களின் உரிமைக்காக உயிர் நீர்த்த உத்தமன் மாவீரன் திலீபனின் நினைவுதினம் எதிர்வரும் 15 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளது. அதற்குரிய அனுமதியை தரமுடியாதென வவுனியா பொலிஸ் தலைமையகம் தடை விதித்துள்ளது. மீறி செய்தால் கைது செய்வோம் என மிரட்டியுள்ளனர். 

எங்களுக்காக உண்ணா நோன்பிருந்து உயிர் நீர்த்த ஒரு உயர்ந்த உத்தமனை நினைவு கூருவதற்கு எங்களுக்கு சகல உரிமைகளும் இருக்கின்றது. அதனை தடை செய்ய உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. 

எங்கள் மீது இனப்படுகொலை செய்துவிட்டு இங்கே வந்து அபிவிருத்தி பற்றியும் நாட்டைக் கட்டியெழுப்புவது பற்றியும் கதைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். 30 ஆண்டுகளாக அழிக்கப்பட்ட எங்கள் மக்களின் உரிமை பற்றியோ அவர்களின் மறுவாழ்வு பற்றியோ முன்னாள் போராளிகளின் மறுவாழ்வு பற்றியோ காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதி என்ன என்பது பற்றியோ தமிழ் அரசியல் கைதிகளின் நிலைபற்றியோ நீங்கள் எதுவும் பேசுவதற்கு தயாராகவில்லை. இந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். 

இவ்வாறு தொடர்ந்தும் செயற்பட்டால் இந்த நாட்டை உங்களால் ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது. ஒரு அரசு இந்தியாவுக்கு சார்பாகவும் இன்னொரு அரசு சீனாவுக்கு சார்பாகவும் செயற்பட்டு உங்களை நீங்களே அடித்துக் கொள்ளும் நிலைதான் வளர்ந்து வருகின்றது. தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரித்து தமிழ் தேசத்தை அங்கீகரித்து, தமிழ் தேசமும் சிங்கள தேசமும் ஒரு இணைந்து ஒரு நாட்டை கட்டியெழுப்ப முன்வாருங்கள். 

ஒற்றையாட்சியை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஒற்றையாட்சி அடிப்படையில் உலக நாடுகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு உதவும் போது அதனைப் பயன்படுத்தி சிங்கள தேசங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. எனவே ஒற்றையாட்சிக்குள் உள்ள எந்தவொரு தீர்வும் எங்களுக்குரிய தீர்வாக இருக்க முடியாது. எனவே எங்கள் தமிழ் தேசத்தை அங்கீகரியுங்கள் என்றார்.

No comments:

Post a Comment