ஐஎஸ் அமைப்பில் இணைந்து கொண்டவர்களுக்கு எதிராக எந்த விதமான உடனடி நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
ஐஎஸ் அமைப்பில் இணைந்து கொண்டவர்களுக்கு எதிராகவும் அவ்வேளை நாட்டின் பல பகுதிகளில் இஸ்லாமிய போதனைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்தார் என குறிப்பிட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் நாட்டில் நல்லிணக்கம் பாதிக்கப்படும் என சிறிசேன கருதினார் என குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முஸ்லீம் அரசியல்வாதிகளுடன் பிரச்சினைகளை உருவாக்குவது குறித்து சிறிசேன அச்சம் கொண்டிருந்தார், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இஸ்லாமிய போதகர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்தார் எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ், அல்கைதா போன்ற அமைப்புகளுடன் தொடர்புகளை பேணுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நான் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டேன் அவ்வாறான அமைப்புகளிடம் ஆயுத பயிற்சியை பெற்ற பின்னர் நாடு திரும்பியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தேன் என ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
எனினும் ஜனாதிபதி அவ்வாறான நடவடிக்கைகளால் முஸ்லீம் அரசியல்வாதிகளுடன் பிரச்சினைகள் ஏற்படும் என தெரிவித்தார். உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என உத்தரவிட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினக்குரல்
No comments:
Post a Comment