நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தால் பாதிக்கப்பட்டு ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வரும் ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவல்னி மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார்.
நவல்னியின் உடல்நிலை முன்னேற்றம் கண்டிருப்பதால் அவர் மீதான தீவிர மருத்துவ பராமரிப்பு முடிவடைந்துள்ளது என்று பெர்லின் நகரில் உள்ள சரிட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் ஜனாதிபதி விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இவர் கடந்த மாதம் 20 ஆம் திகதி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நவல்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் அவசர அவசரமாக ஒம்சக் நகரிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டு நவல்னி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஒம்சக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவல்னியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நவல்னிக்கு கூடுதல் சிகிச்சையளிக்க ஜெர்மனி முன்வந்தது. உடனடியாக ரஷிய அரசின் அனுமதியுடன் நவல்னி ஒம்சக் நகரில் இருந்து ஜெர்மனி நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டார்.
பெர்லினில் வைத்து நவல்னிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு நவல்னி உள்ளாகியுள்ளதாக ஜெர்மனி மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
தொடர் சிகிச்சை காரணமாக கடந்த 8ம் திகதி நவல்னி கோமா நிலையில் இருந்து மீண்டார். ஆனாலும், அவருக்கு செயற்கை சுவாசக்கருவி மூலமாகவே சுவாசித்து வந்தார்.
இதற்கிடையில், 20 நாட்களுக்கு மேலாக வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாதித்து வந்த நவல்னி கடந்த 16ம் திகதி முதல் வெண்டிலேட்டர் உதவியில்லாமல் தன்னிச்சையாக சுவாசிக்கும் நிலைக்கு முன்னேற்றம் அடைந்தார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் நவல்னி பல்வேறு புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தால் பாதிக்கப்பட்டிருந்த அலெக்ஸி நவல்னி தற்போது பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்துவந்த ஜெர்மனி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் இருந்து வெளியேறினாலும் உடல்நிலை பூரணமாக குணமடையும் வரை நவல்னி தொடர்ந்து சில நாட்களுக்கு ஜெர்மனியிலேயே தங்கி சிகிச்சை பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டது தொடர்பாக உரிய விசாரணையை நடத்த வேண்டும் என ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ரஷியாவை வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், இதற்கு ரஷியா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. மேலும், ஒரு சாதாரண குடிமகனாக அலெக்ஸி நவல்னி எப்போது வேண்டுமானாலும் ரஷியாவுக்கு வரலாம் என ரஷிய அரசு தரப்பில் தெரிவ்க்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment