
வன்னி மாவட்டத்தில் கடந்த காலங்களில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் (NHDA) ஆரம்பிக்கப்பட்டு இதுவரை காலமும் பூரணப்படுத்தப்படாமலும் மற்றும் கொடுப்பனவுகள் பூரணமாக வழங்கப்படாமையினாலும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள வீடுகள் தொடர்பான பிரச்சினைகளை வெகுவிரைவில் முடிவுக்கு கொண்டுவருவதற்கான அவசர வேலைத்திட்டமொன்று வன்னி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு கிராமிய வீடமைப்பு பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜங்க அமைச்சர் இந்திக அனுருந்த அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் நேற்று குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடினார்.
கொடிய யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறுபட்ட தேவைகளுடன் மிகவும் சிரமத்தோடு வாழ்ந்து வருகின்ற இந்த மக்கள் கடன் சுமைகளாலும் முறையான தொழில் வாய்ப்பின்றியும் கடும் சிரமப்படுவதையும், மழைக் காலங்களில் அப்பகுதி மக்கள் தமது வாழ்விடங்களில் வாழ முடியாத ஒரு அபாய நிலையில் வாழ்ந்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் இராஜாங்க அமைச்சரிடம் தெளிவுபடுத்தினார்.
இதனடிப்படையில் அதனோடு தொடர்புபட்ட அனைத்து தகவல்களையும் தமக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளதுடன் எதிர்வரும் நாட்களில் குறித்த பகுதிக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இராஜாங்க அமைச்சர் உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
No comments:
Post a Comment