(இராஜதுரை ஹஷான்)
பொருளாதார வளர்ச்சி சீர் செய்யப்பட்டதன் பின்னர் வங்கிக் கடன் நூற்றுக்கு 7 சதவீதத்தால் குறைக்கப்படும். தேசிய உற்பத்திகளை வலுப்படுத்தி ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதே அரசாங்கத்தின் பிரதான இலக்காக காணப்படுகிறது என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கொழும்பு பிரதானநிலை வியாபாரிகளுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தற்போது வங்கி வணிகக் கடன் ஒவ்வொரு வியாபார நிலைகளின் பிரகாரம் குறைக்கப்பட்டுள்ளது. வருடத்தின் இறுதியில்தான் வியாபாரத்தின் நட்டம் அறிந்துக் கொள்ள முடியும். ஆனால் கடந்த அரசாங்கத்தில் நிலைமை தலைகீழாக காணப்பட்டது.
நல்லாட்சியில் வணிக கடன்களுக்கு 28 சதவீத வட்டி விதிக்கப்பட்டது. 20 தொடக்கம் 25 சதவீத வட்டியில் கடன்களை பெற்று எவரும் முன்னேற்றமடையவில்லை. பொருளாதாரத்தை சீர் செய்து வணிக கடன்களுக்கான வட்டியை 7 சதவீதமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தனி இலக்கத்தில் வணிகக் கடன்களுக்கு வட்டி அறவிடப்படுகின்றன. எமது நாட்டில் இவ்வாறான நிலைமை செயற்படுத்த வேண்டும். வியாபாரங்கள் வீழ்ச்சியடைவதற்கு நடைமுறையில் உள்ள வங்கி கடன்களுக்கான வட்டி வீதமும் ஒரு காரணியாக உள்ளது.
தேசிய உற்பத்திகளை வலுப்படுத்தி ஏற்றுமதி பொருளாதாரத்தை ஊக்குவிப்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. உள்ளுர் உற்பத்திகளை மேம்படுத்தும் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த அரசாங்கம் இறக்குமதி பொருளாதாரத்தில் தங்கியிருந்தமையினால் உள்ளுர் உற்பத்திகள் பாரிய வீழ்ச்சியடைந்தது. இது போன்றநிலை இனி ஏற்படாது என்றார்.
No comments:
Post a Comment